புதுடெல்லி: விவசாயிகள் வங்கியில் வாங்கியக் கடனை திரும்ப செலுத்த தவறினால், அது சிவில் வழக்கில்தான் வருமே ஒழிய, கிரிமினல் வழக்கில் சேராது. ஆனாலும், அந்தப் பிரச்சினை கிரிமினல் பிரிவில் சேர்க்கப்படுவதால், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

பொதுவாக, வங்கியில் வாங்கியக் கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால், அது சிவில் குற்றமாகவே கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட இருதரப்புக்கும் இடையில், சுமூகமான தீர்வு (செட்டில்மென்ட்) எட்டப்பட வழிவகை செய்யப்படும். ஆனால், கிரிமினல் குற்றம் எனும்போது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்கும் நிலை ஏற்படுகிறது.

இந்திய அரசியல் சட்டப்படி, வங்கிக் கடனை திருப்பி செலுத்தாத நிலை என்பது சிவில் குற்றம்தானே ஒழிய கிரிமினல் குற்றமல்ல. ஆனால், விபரம் அறியாத விவசாயிகளின் மீது, வங்கிகள் தரப்பில் கிரிமினல் வழக்கு தொடுக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டன.

இதனையடுத்துதான், வங்கிக் கடனை விவசாயிகள் திரும்ப செலுத்தமுடியாமல் போனால், அது சிவில் வழக்காகவே கையாளப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

– மதுரை மாயாண்டி