சென்னை,

ரசு ஊழியர்களின் ஊழலை தடுக்க ஏன் புதிய சட்டம் கொண்டுவரக்கூடாது? என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

லஞ்சம் கொடுக்காததால், பத்திரபதிவை ஏற்க மறுத்த சார்பதிவாளருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி, அரசு ஊழியர்கள் ஊழலில் ஈடு பட்டால் அவர்களை கட்டுபடுத்த குண்டர் சட்டம் போல புதிய சட்டம் கொண்டுவந்தால் என்ன என்று தமிழக அரசு கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் பூபதி என்பவர்,  ‘எங்களது தாத்தாவின் சொத்துகளை பாகப்பிரிவினை செய்து, பத்திரப்பதிவு செய்தோம். முறையான முத்திரைக் கட்டணம் செலுத்தி யும் பம்மல் சார் பதிவாளர் பத்திரப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறார்’ என்று வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டு தனி நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,   மனுதாரரின் வக்கீல் என்.சுரேஷ், ‘லஞ்சம் கொடுக்கவில்லை என்பதால் முறையான முத்திரைக் கட்டணம் செலுத்தியும், பத்திரப்பதிவை செய்யாமல் சார் பதிவாளர் இழுத்தடித்தார். இதுபோல தான் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் நடைபெறுகிறது’ என்று வாதிட்டிருந்தார்.

அதன்படி,  இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பாகப்பிரிவினை சொத்துகள் தொடர்பான பத்திரப்பதிவுகளை செய்து, அந்த பத்திரங்கள் நீதிபதி முன்னிலையில் மனுதாரரின் வக்கீலிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 10 ஆண்டுகளில் பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது? அதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால்,  போலீசார் சரியான பதில் தரவில்லை என்று குற்றம் சாட்டிய நீதிபதி,

அரசு ஊழியர்கள் ஒவ்வொரு பணிக்கு ஒவ்வொரு தொகையை மக்களிடம் இருந்து கட்டாயப் படுத்தி லஞ்சமாக பெறுகின்றனர்.

லஞ்ச ஊழலை தடுக்க வேண்டும். இதற்காக கடுமையான சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றார். 

லஞ்சம் வாங்கும் பொது ஊழியர்கள் (மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள்) மீது கடுமையான நடவடிக்கை எடுக்க குண்டர் தடுப்புச்சட்டத்தை போல, தனியாக தடுப்புச் சட்டம் கொண்டுவந்தால் என்ன?

புதிய சட்டம் கொண்டுவரும் வரை, சமூகவிரோதிகள் மீது தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் குண்டர் தடுப்புச் சட்டத்தை பொது ஊழியர்கள் மீது ஏன் பயன்படுத்தக்கூடாது?

என்று கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி,

கடந்த 10 ஆண்டுகளில் அரசு அலுவலகங்களில் எத்தனை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன? 

எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?

எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?

அவர்களிடம் இருந்து எவ்வளவு லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது?

அதிகளவில் லஞ்சம் புழங்கும் முதல் 5 அரசு துறைகள் எவை?

லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தும்போது ஏற்படும் பிரச்சினைகள் என்ன?

லஞ்ச ஒழிப்பு துறைக்கு போதிய நிதி ஒதுக்கப்படுகிறதா?

என சரமாரியாக கேள்விகளை விடுத்துள்ளார். மேலும், என்றும், இந்த கேள்விகளுக்கு  லஞ்ச ஒழிப்பு ஆணையர், உள்துறை செயலாளர் ஆகியோர் வருகிற 11-ந் தேதிக்குள் பதிலளிக்கவேண்டும்.

இவ்வாறு நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.