ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தை  பாஜக அரசு கொலை செய்துள்ளது என்று குற்றம் சாட்டிய பிடிபி கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி,  சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, பாகிஸ்தானுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது? என கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக பிரிக்கப்பட்ட பின்னர்  முதன்முறையாக நவம்பர் 28ந்தேதி மாவட்ட கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. அங்கு மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி நவம்பர் 28ந்தேதி முதல்  முதல் வருகிற டிசம்பர் 19ந்தேதி வரை  8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22ந்தேதி நடைபெறுகறது. இந்த  மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில், பா.ஜ.க. , காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் மாநாட்டு கட்சி மற்றும் சி.பி.ஐ. (எம்.) ஆகியவை உள்பட ஏராளமான சுயேச்சைகளும் களமிறங்கி உள்ளனர்.

இந்த நிலையில், செய்திநிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிடிபி கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி, காஷ்மீர் பிரச்னைக்கு  தீர்வு இந்த தேர்தல் அல்ல என்று கூறியதுடன், எங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களை பிரசாரம் மேற்கொள்ள அனுமதிக்காமல் வீட்டிலேயே அடைக்கப்பட்டுள்ளார்கள். அதேசமயம், பா.ஜ., வேட்பாளர்கள் சுதந்திரமாக உலா வருகின்றனர்.

சட்டப்பிரிவு 370 குறித்து பேசக் கூடாது என எங்களிடம் கூறுகின்றனர். பா.ஜ. அமைச்சர்கள் காஷ்மீருக்கு வருகின்றபோது, 10-ல் 9 முறை சட்டப்பிரிவு 370 குறித்து அவர்கள் பேசுகின்றனர். சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டுவிட்டது, அது திரும்ப கொண்டுவரப்படாது என்பதில் பா.ஜ., உறுதியாக இருந்தால், பிறகு ஏன் அதைப் பற்றி நான் பேசும்போது அவர்களுக்கு சலசலப்பு ஏற்படுகிறது. இதை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. யார் பேச முற்பட்டாலும், அவர்கள் மீது தடுப்புச் சட்டம் பாய்கிறது. ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது.

நான் காவலில் வைக்கப்பட்ட பிறகு, தேர்தல் அதிகாரிகளும், மற்ற அதிகாரிகளும் நான் காவலில் வைக்கப்படவில்லை என்று கூறியது துரதிருஷ்டவசமானது.  ‘இங்கு ஏறத்தாழ இந்தியாவின் 9 லட்சம் பாதுகாப்புப் படைகள் உள்ளன. வேறு எந்த மாநிலத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் இத்தனைப் படைகள் உள்ளன?சட்டப்பிரிவு 370 அனைத்துப் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுவிட்டது என்றால் இன்னும் எதற்கு இங்கு ராணுவம் குவிந்துள்ளது? அவர்கள் எல்லைக்குச் சென்றிருக்க வேண்டும். தேர்தலில் பங்கெடுப்பது காஷ்மீர் பிரச்னையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வரை இந்தப் பிரச்னை இருந்துகொண்டேதான் இருக்கும். இருநாடுகளுக்கிடையே (இந்தியா-பாகிஸ்தான்) பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். நமது நிலத்தை ஆக்கிரமித்த சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, பாகிஸ்தானுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது? அது முஸ்லிம் நாடாக இருப்பதால்தான் தற்போது எல்லாமே வகுப்புவாதமாக இருக்கிறதா?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.‘

மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: ஜம்முகாஷ்மீரில் முதற்கட்டமாக இன்று 43 தொகுதிகளில வாக்குப்பதிவு