ஐதராபாத்: தெலுங்கானா மாநில அமைச்சர் கே.டி.ராமராவின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால், அம்மாநில காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரேவந்த் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கூறப்படுவதாவது; தெலுங்கானா மாநிலத்தில் ஒஸ்மாசாகர் ஏரி அருகே, அமைச்சர் கே.டி.ராமராவின் பண்ணைத் தோட்டத்தில், விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டப்படுவதை, புகைப்படம் எடுத்து மீடியாக்களுக்கு வெளியிட்டார் ரேவந்த் ரெட்டி.

மேலும், ரேவந்த் ரெட்டி, கட்டுமானப் பகுதிக்குள் தன் ஆதரவாளர்களுடன் நுழையவும் முற்பட்டார். இதனையடுத்து, இவரின் மீது சட்டவிரோதமாக ட்ரோன் பயன்படுத்தி புகைப்படம் எடுத்தது உள்ளிட்டக் காரணங்களுக்காக பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவருக்கு, 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த நடவடிக்கை, பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.