அகமதாபாத்: வெறும் 22 யார்டு அளவுகொண்ட ஒரு இடத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்காமல், ஆட்டத்தின் தரத்தைப் பற்றி பேச வ‍ேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்.

3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து மோசமாக தோற்றப் பிறகு, பிட்ச் குறித்து விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், அஸ்வின் கூறியுள்ளதாவது, “ஒவ்வொருவரும் தங்களின் கருத்தைக் கூறுவதற்கு உரிமையுள்ளவர்கள். அதேசமயம், ஒருவரின் கருத்து சரியா? தவறா? என்று மதிப்பிடுவது எனது வேலை அல்ல. தற்போது அகமதாபாத் பிட்ச் குறித்த பேச்சு கைமீறி சென்று கொண்டுள்ளது.

எதற்காக பிட்ச் குறித்தே பேசப்பட்டு வருகிறது. நாம் வெளிநாடுகளில் விளையாடியபோது, பிட்ச் குறித்து இவ்வாறெல்லாம், இந்தளவிற்கு பேசப்பட்டதா? பிட்சி குறித்து யாராவது எதையேனும் பேசினால், அது உடனே மீடியாவின் கவனத்தை ஈர்த்து விடுகிறது. நாங்கள் கிரிக்கெட்டை வேறுமாதிரி அணுகுவதற்கு கற்பிக்கப்பட்டுள்ளோம். வேறு நாடுகளில் சென்று ஆடியபோது, பிட்ச் குறித்து நாங்கள் குற்றம் சாட்டியதில்லை” என்றுள்ளார் அஸ்வின்.