மும்பை

பொருளாதார மந்த நிலை குறித்து பாஜக அரசு மவுனமாக உள்ளதாக சிவசேனா கட்சியின் நாளேடு சாம்னா குறிப்பிட்டுள்ளது.

பிரபல இந்தித் திரைப்படமான ஷோலே என்னும் திரைப்படத்தில் ஒரு பிரபல வசனம் உண்டு.  மூத்த நடிகரான ஏ கே ஹங்கல் அந்தப் படத்தில் பார்வையற்றவராக வருவார்.   அவருடைய மகனை கொள்ளையன் கபர் சிங் கொன்று ஒரு குதிரைமேல் ஏற்றி அனுப்பியதால் கிராம மக்கள் மவுனமாக இருப்பார்கள்.  இது குறித்து எதுவும் தெரியாத ஏ கே ஹங்கல் கிராம மக்களிடம் :இத்தனை மவுனம் ஏன்” எனக் கேள்வி எழுப்புவார்.

ஷோலே திரைப்படத்தில் ஏ கே ஹங்கல்

தற்போது அதே வசனத்தை தலைப்பாக வைத்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னா ஒரு தலையங்கம் வெளியிட்டுள்ளது.   அந்த தலையங்கத்தில், “தற்போதுள்ள வர்த்தக சந்தையில் அனைத்துப் பொருட்களின் விற்பனையும் 300% முதல் 40% சரிந்துள்ளன.  இதற்குக் காரணம் பொருளாதார மந்த நிலையே ஆகும்.   இதனால் தொழிற்கலைகளில் உற்பத்தி குறைந்து பலர் பணி இழந்துள்ளனர்.  பல வங்கிகள் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளன.

மக்கள் அத்தியாவசிய செலவுக்கும் பணம் இன்றி வாடுகின்றனர்.   ஆனால் ரிசர்வ் வங்கியிடம் உள்ள பணத்தை அரசு வாங்கிக் கொள்கிறது.  தீபாவளி நேரத்தில் குட இந்திய நிறுவனங்கள் அமைதியாக உள்ள நேரத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகம் மூலம் இந்தியப் பணத்தை எடுத்துச் செல்கின்றன.

பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடும் மழை காரணமாக அவை  பாழானதால் மிகவும் துயருற்றுள்ளனர்.  ஆனால் இது குறித்தோ விவசாயிகளின் துயரத்துக்குத் தீர்வு காணவோ யாரும் முன்வருவது இல்லை.  இவ்வாறு அனைத்து விவகாரங்களிலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மவுனம் சாதிக்கின்றன.

இந்த நிகழ்வுகள் அனைத்துக்கும் காரணம் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் என்பது குறித்து அரசு எதுவும் தெரிவிப்பது இல்லை.   அரசு மிகவும் மவுனமாகவே உள்ளது.  இத்தனை மவுனம் ஏன்?” என குறிப்பிடப்பட்டுள்ளது.