தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்களை கலைக்க தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது  காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி உள்ளிட்டவை நடத்தப்பட்டது. தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 10 பலியானார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுப்பியுள்ளார்.

அதில் தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது யார்? கூட்டத்தினரைக் கலைக்க தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன்? அதனை எந்தச் சட்டம் அனுமதித்தது?கூட்டத்தினரை கலைக்க ரப்பர் பிளாஸ்டிக் குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் உயிர் இழப்புகளை தவிர்த்திருக்கலாமே ? சுடுவதற்கு முன்பு ஏன் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்படவில்லை” என்று மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.