டில்லி:

ந்திய ரெயில்வேயின் இணையதளத்தில் தட்கல் முறையில் ஒரு படுக்கை வசதிக் கொண்ட டிக்கெட்டை  புக் செய்வது மிகவும் கடினமான காரியமாக தான் பலருக்கும் உள்ளது. எப்போது அதனுள் நுழைந்தாலும்  ரெயில்வேயின் இணையதளம் சுற்றிக் கொண்டே இருப்பதால் பலரும் எரிச்சலடைந்து ஏஜென்ட்களை நாடிச்  செல்லும் நிலை தான் தற்போதும் உள்ளது. ஏஜென்ட்களிடம் சென்றால் மட்டும் உடனடியாக டிக்கெட்  கிடைத்துவிடுகிறது. அது எப்படி என்று பலரும் சந்தேகிப்பது உண்டு.

இதற்கு என்ன காரணம் என்பது பலருக்கும் புரியாத புதிராக இருந்து வந்தது. இந்த சந்தேகம் ரெயில்வே  துறைக்கும் ஏற்பட்டது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.        தற்போது  இதற்கான காரணத்தை சிபிஐ கண்டுபிடித்துவிட்டது.

ஆம்….இதற்கு காரணமாக அந்த கருப்பு ஆடு சிபிஐ.யிலேயே இருந்துள்ளது. 2012ம் ஆண்டு சிபிஐ.யில்  உதவி ப்ரோகிராமராக பணியில் சேர்ந்தவர் அஜய் கார்க். இவர் தான் நியோ என்ற சட்டவிரோத           சாப்ட்வேரை உருவாக்கி அதன் மூலம் ஒரே நேரத்தில் 800 முதல் ஆயிரம் டிக்கெட்கள் வரை ரெயில்வே  இணைய தளத்தில் புக்கிங் செய்துள்ளார்.

அஜய் கார்க் மற்றும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கடந்த ஒரு வருடமாக இந்த மோசடியில் ஈடுபட் டுள்ளனர். இவர் 2007ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை ரெயில்வேயின் முன்பதிவு இணையதளத்தை  மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த இணையதளத்ததின் அனைத்து நுணுக்கங்களும்  அவருக்கு அத்துப்படியாகியுள்ளது. இந்த மென்பொருளை பல ஏஜென்ட்களுக்கு இவர் விற்பனை  செய்துள்ளார்.

தனது சொந்த கணக்கு மூலம் தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியாத பயணிகள் ஏஜென்ட்களை நாடி  செல்லும் நிலையை ஏற்படுத்தி, உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை பெற ஏஜென்ட்களுக்கு அதிக தொகை  கொடுத்துள்ளனர்.

இந்த ஏஜென்ட்கள் போலி இணையதளம் மூலம் ஊடுறுவி டிக்கெட் புக்கிங் செய்து கொடுத்துள்ளனர்.  டில்லி, மும்பை, ஜாவுன்பூர் ஆகிய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி ரூ.89.42 லட்சம் ரொக்கம், ரூ.61.9  லட்சம் மதிப்பு தங்க நகைகள், தலா ஒரு கிலோ எடையுள்ள 2 தங்க கட்டடிகள், 15 லேப்டாப்களை சிபிஐ  பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட  அஜய்கார்கை வரும் 5ம் தேதி வரை கஸ்டடி எடுத்து       விசாரணை நடத்த நீதிமன்றும் அனுமதி வழங்கியுள்ளது.