சென்னை: அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு  மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்திருக்கிறது.  கரூர் மாவட்டத்தில் மாயனூர், வேலாயுதம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் கனமழைபெய்கிறது.  தேவனூர், ஆவியூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மழை பெய்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகின்றது.