டில்லி : ‘மனைவி வீணாக சந்தேகப்படுவது, கணவனை கொடுமைப்படுத்துவதாகவே கருதப்படும்’ என்று, டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விவாகரத்து தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், “ கணவனுக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக, மனைவி வீணாக சந்தேகப்படுவதும், கணவனை கொடுமைப்படுத்துவதாகவே எடுத்துக் கொள்ள முடியும். இதுபோல், பொய்யாக குற்றம் சுமத்துவது, கணவனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.
தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டும்போது, அந்த பெண்ணுடன் வாழ்வது, ஆபத்தாகவே இருக்கும். இவ்வாறு புகார் கூறும்போது, கணவன் மற்றும் மற்றொரு பெண்ணின் கண்ணியத்துக்கும், நற்பெயருக்கும், மனைவி களங்கம் ஏற்படுத்துகிறார்; இது தவறு” என்று தெரிவித்தது.

மேலும், “குறிப்பிட்ட வழக்கில்,  பொய் புகார் கூறி, சித்ரவதை செய்யும் மனைவிக்கு எதிராக, கணவனுக்கு விவாகரத்து அளித்து, குடும்பநல நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு செல்லும்” என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.