சென்னை:

துரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஜனவரி மாதம் 27ந்தேதி அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிலம் இதுவரை தமிழக அரசால் ஒதுக்கப்பட வில்லை என்று ஆர்டிஐ (தகவல் பெறும் உரிமை சட்டம்) மூலம் தகவல் வெளியாகி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் வலியுறுத்தல் காரணமாக தமிழகத்தின் பல ஆண்டு கோரிக்கையான  எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் மோடி, எடப்பபாடி,பன்வாரிலால் (ஜனவரி 27, 2019)

பின்னர்  எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேச்சே எழாத நிலையில்,  எதிர்க்கட்சிகளின் தொடர் நெருக்குதல் மற்றும் தமிழக அரசின் வற்புறுத்தல், நீதிமன்றங்களின் உத்தரவு காரணமாக, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கப்படும் என  2018ம் ஆண்டு மத்திய அரசு தெரிவித்தது. அதைத்தொடர்ந்து, மருத்துவமனையை எங்கு அமைப்பது என்பதுதொடர்பாக மேலும் காலதாமதம் ஆக இறுதியில் மதுரையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு  மதுரை தோப்பூரில் ரூ 1264 கோடி திட்ட மதிப்பீட்டில்  202 ஏக்கரில் 750 படுக்கை வசதியுடன் கட்டப்படும் 100 எம்.பி.பி.எஸ் படிப்புக்கான இடங்களும், 60 செவிலியர் படிப்பிற்கான இடங்களும் அனுமதிக்கப் படும் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 27ந்தேதி வெகு விமரிசையாக அதற்கு பிரதமர் மோடியும் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில்,  மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிலத்தை தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும், எய்ம்ஸ் கட்டுமானம் குறித்த திட்ட அறிக்கையும் இன்னும் தயார் செய்யப்பட வில்லை… தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவேகடந்த மார்ச் மாதம், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மத்தியஅரசு எந்தவித நிதியும் ஒதுக்கவில்லை என்பது ஆர்டிஐ மூலம் வெளியான நிலையில், தற்போது நிலமே ஒதுக்கப்படவில்லை என்ற தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது கேள்விக்குறியாகி உள்ளது.