மும்பை :

காராஷ்டிரா மாநில  கூட்டணி  அமைச்சரவையில் இலாகா ஒதுக்கீடு தொடர்பாக சில அமைச்சர்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அங்கு ஆட்சி  நீடிக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கேர தனது மகனுக்கு முதல்வர் பதவி கேட்டு அடம் பிடித்ததால், கூட்டணி முறிந்தது.

இதையடுத்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து. மாநில முதல்வராக சிவசேனா கட்சித்தலைவர்  உத்தவ் தாக்கரே கடந்த ஆண்டு  நவம்பர் 28ந்தேதி பதவி ஏற்றார். அவருடன் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த  6 பேர் முதல் கட்டமாக அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

அதைத் தொடர்ந்து சுமார் 1 மாதம் இழுபறிக்கு பின்பு, 2வது கட்டமாக 3 கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கி  கடந்த ஆண்டு (2019) டிசம்பர் 30ந்தேதி மேலும் 36 பேர் அமைசர்களாக பதவி ஏற்றனர். அதன்படி,  சிவசேனா கட்சிக்கு 13 பேரும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 13 பேரும், காஙகிரஸ் கட்சியைச் சேர்ந்த  10 பேரும்  அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இதையடுத்து மாநில அமைச்சரவையின் மொத்தம் 42ஆக அதிகரித்தது.

இந்த நிலையில், அமைச்சர்கள் நியமிக்கப்பட்டது தொடர்பாக சிவசேனா, காங்கிரஸ், என்சிபி எம்எல்ஏக்களிடம் அதிருப்தி நிலவியதாக கூறப்பட்டது. இதையடுத்து, மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களை  காங்கிரஸ் தலைமை டெல்லிக்கு வரவழைத்து சமாதானப்படுத்தியது.

இந்த நிலையில்,  மேலும் 26 பேருக்கு அமைச்சர் பதவி வழங்க உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளதாகவும், வரும் 6ந்தேதி அவர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் தகவல் வெளியானது.

இதற்கிடையில்,  அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு தொடர்பாக, அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட சிவசேனா, மற்றும் காங்கிரஸ் அமைச்சர்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது. முக்கி அமைச்சர் பொறுப்பான, உள்துறை மற்றும் நிதித்துறை தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் கூட்டணிக்குள் குழப்பம் நீடித்து வருகிறது.

சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர்  அப்துல் சத்தார் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியானது. (முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியான இவர், சமீபத்தில்தான் அதில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது) அதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ., கைலாஷ் கோரன்டியால் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனது ராஜினாமா குறித்து கூறியுள்ள கைலாஷ், 4ந்தேதி நடைபெற்ற  மாவட்ட அளவிலான கட்சி ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும்,  தன்னுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜல்னா முனிசிபல் கவுன்சில், ஜில்லா பரிஷித் உறுப்பினர்களும்  தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளது கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவரான ஷாயிக் மஹ்மூதும் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்து உள்ளார்.

தொடரும் அதிருப்தியாளர்களின் ராஜினாமா மிரட்டல் காரணமாக உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி கலகலகத்துபோய் உள்ளது. ஆட்சி எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.