கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டால் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்க போவதாக சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

அண்மையில் திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் சுவேந்து அதிகாரி.  பூர்பா மிட்னாபூரில் உள்ள கெஜூரியில் நடந்த பேரணியில் அவர் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: மமதா பானர்ஜி 2 இடங்களில் போட்டியிடுவது நியாயமில்லை. நந்திகிராம் தொகுதியில் மட்டுமே அவர் போட்டியிட வேண்டும். 2 இடங்களில் போட்டியிட முடியாது.

நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டால் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை தோற்கடிப்பேன் என்று பேசினார். முன்னதாக, சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும், முடிந்தால், பவானிபூர் மற்றும் நந்திகிராம் ஆகிய 2 தொகுதியிலும் போட்டியிடுவேன் என்றும் முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறி இருந்தார்.