சென்னை:
ரசு பள்ளி மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்கப்படுமா? என்று அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அதுகுறித்து ஏன் பரிசீலிக்க கூடாது? என்று தெரிவித்து உள்ளனர்.
கொரேனாவால் தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால், அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு அரிசி பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், முட்டைகள் வழங்கப்படவில்லை.

இந்த  நிலையில், தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் இலவச முட்டைகள் வழங்கவும், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்கக்கோரியும், அவர்களுக்கு முட்டைகள் மற்றும் மாணவிகளுக்கு வழங்கப்படும் நாப்கின்களை வழங்க உத்தரவிடக் கோரியும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  அரசு தரப்பில்,  சத்துணவுக் கூடங்கள் மூடப்பட்டுள்ள போதிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம், குழந்தைகள், வளர் இளம் பெண் குழந்தைகள், கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அரசி, பருப்பு, சத்துமாவு, முட்டை ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று வழங்கி வருவதாகவும், இதன் மூலம் இந்த ஊரடங்கு காலகட்டத் திலும் 33 லட்சத்து 12 ஆயிரத்து 629 பேர் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், சத்துணவுத் திட்டத்தின் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் 42 லட்சத்து 61 ஆயிரத்து 124 மாணவ மாணவியருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
கொரானா தொற்று பரவி வருவதால் மாணவர்களை தினமும் பள்ளிகளுக்கு அழைத்து இலவச முட்டைகள் வழங்குவது பாதுகாப்பாக இருக்காது எனவும் தமிழக அரசு தெரிவித்தது.
இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு அரசு பள்ளி  ஆசிரியர்கள் பணியின்றி வீட்டில் இருக்கும் நிலையில், அவர்கள் மூலமாக பள்ளி குழந்தைகளுக்கு முட்டை வழங்குவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது என கேள்வி எழுப்பியவர்கள்,  தினசரி வழங்க முடியாவிட்டாலும்,  வாரத்தில் ஒரு நாள் அடிப்படையில் மொத்தமாக முட்டைகளை விநியோகிக்கலாம், அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நாப்கின்களை தொடர்ந்து வழங்குவது தொடர்பாகவும் பரிசீலிக்க தமிழகஅரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை  ஆகஸ்டு 3ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.