சிம்லா: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே இமாச்சலின் தரம்சாலாவில் நடைபெறவுள்ள முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்தாகலாம் என்று கூறப்படுகிறது.

மார்ச் 12ம் தேதி(நாளை) இப்போட்டி நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டி நடைபெறவுள்ள தரம்சாலா மைதானம் கடல் மட்டத்திலிருந்து 1457 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கே, அடுத்தடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, நாளை நடக்கும் போட்டி பலத்த மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் முழுமையாக ரத்தாகும் வாய்ப்புகள் அதிகம் என்ற தகவல், ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கடைசியாக மோதிய 8 ஒருநாள் போட்டிகளில், 7 போட்டிகளை இந்தியா வென்றிருப்பதால், இத்தொடரை இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்துள்ள தென்னாப்பிரிக்கா, அந்த உற்சாகத்தில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.