துபாய்: தற்போது அமீரக நாட்டிலுள்ள சென்னை அணியுடன் ஹர்பஜன் சிங் இன்னும் இணைந்துகொள்ளாத நிலையில், அவர் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அமீரக நாட்டில் ஐபிஎல் 13வது சீசன் விரைவில் துவங்கவுள்ளது. இதனையடுத்து, சென்ன‍ை உள்ளிட்ட பல அணிகள் அமீரகம் சென்றடைந்துள்ளன. ஹோட்டல் அறைகளில் வீரர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

சென்னை அணியின் சில வீரர்களுக்கு கொரோனா பாசிடிவ் முடிவு வந்தது. மேலும், அந்த அணியின் முக்கிய வீரரும், துணை கேப்டனுமான ரெய்னா, இத்தொடரிலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில், செப்டம்பர் 1ம் தேதி, அமீரகம் வந்து அணியுடன் இணைந்துகொள்வதாக தெரிவித்த ஹர்பஜன் சிங், இன்னும் அமீரகம் போய்ச் சேரவில்லை.

அவரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து அணி நிர்வாகத்திற்கு முறையான தகவலும் சென்றடையவில்லை. ஐபிஎல் துவங்க இன்னும் 17 நாட்களே மீதமுள்ள நிலையில், ஹர்பஜனின் நிலைப்பாடு கேள்விக்குறியாக உள்ளது. அவர், இதுவரை முறையான பயிற்சியிலும் ஈடுபடவில்லை.

எனவே, அவர், இந்த ஐபிஎல் தொடரில் கலந்துகொள்வாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதனால் சென்னை அணிக்கு மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது.