சென்னை:

ட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ள  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  படத்தை அகற்ற கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் திமுக வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 12ந்தேதி  திறக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை அகற்றக் கோரி திமுக வழக்கு தொடர்ந்தது.

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர் என்பதால், ஜெயலலிதா வின் படத்தை சட்டப்பேரவையில் இருந்து அகற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந் தார்.

இந்த வழக்கு  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்திருந்தது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, திமுக சார்பில் ஆஜரான  மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் , “அரசியலமைப்புச் சட்டப்படி, சட்டப்பேரவை நடவடிக்கை களில்தான் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆனால், பேரவையில் ஒருவரது உருவப்படம் வைப்பது நிர்வாக நடைமுறைதான். அதில் நீதிமன்றம் தலையிட முடியும். எனவே, சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை பேரவையில் இருந்து அகற்ற உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.

இதை எதிர்த்து தமிழக அட்வகேட் ஜெனரல் விஜயநாராயண் வாதாடும்போது, ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. அதனால், பேரவையில் அவரது படம் திறந்ததில் தவறு இல்லை” என்றார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்தி வைப்பதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, தமிழகத்தில்  அரசு அலுவலகங்களில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் வைக்க தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட  வழக்குகளை சென்னை  உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது குறிப்பிடத்தக்கது.