திருவனந்தபுரம்: ஐக்கியஅரபு அமிரகம் தூதரகம் பெயரில் கேரளாவில்  தங்கக்கடத்தல் செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கடத்தலில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், தங்கக்கடத்தல் வழக்கில், முதல்வர் பினராயி விஜயனின் பெயரையும் சேர்க்குமாறு தனக்கு நெருக்குதல் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் வரும் பார்சல்களில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சுங்கத்துறை நடத்திய சோதனையில்,  தூதரக பார்சலில் தங்கம் கடத்தியது தெரிய வந்தது. இதுதொடர்பான வழக்கை என்ஐஏ, அமலாக்கததுறை, மாநில காவல்துறை என பல தரப்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான, கேரள அரசின் ஐடி பிரிவு அதிகாரி  ஸ்வப்னா சுரேஷ்,  முதல்வரின் முதன்மைச் செயராளலான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் உள்பட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தியது.

இந்த தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கர் உள்பட பலருக்கு இதுவரை  ஜாமீன்  கிடைக்கவில்லை.  முன்னாள் முதன்மைச் செயலாளரான  சிவசங்கர் எர்ணாகுளம் சிறையிலும், ஸ்வப்னா சுரேஷ் திருவனந்தபுரத்தில் உள்ள மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கடத்தல் வழக்கில், கேரள மாநில முதல்வர் அலுவலக அதிகாரிகள் பலரும் சிக்குவார்கள் என தெரிகிறது.  விரைவில், முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் சில முக்கிய அதிகாரிகள் விசாரிக்கப்பட இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித் துஉள்ளது.

தங்கக்கடத்தல் தொடர்பான, முதல்வர்  பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளர் ரவீந்திரனுக்கு மத்திய அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதால் தற்போது மருத்துவமனையில் உள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஒரு மலையாள இணையதளத்தில் ஸ்வப்னா சுரேஷின் பேசியதாக ஒரு ஆடியோ  ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

ஸ்வப்னா சுரேஷ் வாய்சில் உள்ள அந்த ஆடியோவில்,  தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் எதிராக நான் வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் என்னைக் கட்டாயப்படுத்துகின்றனர். அவ்வாறு முதல்வருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் இந்த வழக்கில் என்னை அப்ரூவர் ஆக்குவதாகவும்  தெரிவித்துள்ளனர்.

நான் ஏற்கெனவே கொடுத்த வாக்குமூலத்தை இதுவரை எனக்குப் படித்துப் பார்ப்பதற்கும்  தர மறுக்கிறார்கள். அந்த வாக்குமூலத்தில், நான் கூறாத பல விவரங்களும்  இடம் பெற்றுள்ளதாக எனது வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார்.

கேரள அரசின் பல்வேறு நலத் திட்டங்களில் உதவி பெறுவதற்காக முதல்வர் பினராயிவிஜயன் துபாய் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்றார். அதற்கு முன்னதாக கேரளாவுக்கு உதவுவதாக கூறிய நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக சிவசங்கர் துபாய் சென்றிருந்தார். அவருடன் நானும் சென்றேன். அப்போது அந்த நிறுவனங்களுடன் முதல்வருக்காக கமிஷன் பணத்தை வாங்கியதாக வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அமலாக்கத் துறையினர்  என்னை வற்புறுத்துகின்றனர்.

ஆனால் நான் அதற்குச் சம்மதிக்கவில்லை. ஆனாலும் சிறைக்கு வந்து என்னிடம் வாக்குமூலம் பெற அவர்கள் முயற்சித்து வருகின்றனர் என அந்த ஆடியோவில் ஸ்வப்னா கூறுவதாக உள்ளது.

இந்த ஆடியோ  கேரளாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ ஸ்வப்னாவின் ஆடியோதானா, சிறையில் இருந்து தான் இந்த ஆடியோ எப்படி வெளியானது, அவரிடம் யார் ஆடியோ பதிவு செய்தது என்பது குறித்து ரகசிய விசாரனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், முதல்வரின் பல கூட்டாளிகள் சிறையில் ஸ்வப்னாவை சந்தித்து பேசிய குற்றம் சாட்டியிருநதார். இந்த நிலையில் ஸ்வப்னாவின் ஆடியோ வெளியாகி இருப்பது கேரளாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.