மதுரை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நாளை விசாரிக்கப்பட உள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து வருகின்றனர். இதனால்,  ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது.

பல்வேறு விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளதுபோல ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எந்த அளவுக்கு சாதகத்தை ஏற்படுத்துகின்றனவோ, அதே அளவுக்கு பாதகத்தையும் ஏற்படுத்துகின்றன. இதுதொடர்பான  விளம்பரங்கள்  தொலைக்காட்சி, இணையதளம் என அனைத்திலும்  தோன்றி இளைஞர்களையும், பல்வேறு தரப்பினருக்கும் ஆசையை தூண்டி வருகின்றன.   அதுமட்டுமின்றி, ஆன்லைன் சூதாட்டத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் அதற்காக எவ்வளவு தொகையை செலுத்தினாலும் சூதாட்ட நிறுவனத்தின் சார்பில் அதிகபட்சமாக ரூ.1500 வரை போனஸ் வழங்கப்படும் என்றும், அதைக்கொண்டு அதிக நேரம் விளையாடலாம்; அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும் விளம்பரத்தில் வலை விரிக்கப்படுகிறது. இதற்கு மயங்கி, ஆன்லைன் ரம்மி என்ற சூதாட்டத்தை விளையாடத் தொடங்குபவர்கள் தங்களின் பணத்தையும் இழந்து, சூதாட்டத்திற்கு அடிமையாகிறார்கள்.

முன்பு கணினி வசதி இருப்போர் மட்டும் தான் இணையதளங்களை பார்க்க முடியும் என்ற காலம் மாறி விட்டது. ஸ்மார்ட் தொலைபேசிகளின் வருகையால் பாமரர் கூட செல்பேசியிலேயே இணையத்தை பயன்படுத்த முடியும் என்பதால் மிகவும் எளிதாக இந்த சூதாட்ட வலையில் விழுந்து விடும் ஆபத்து உள்ளது . இப்போதே ஏராளமான இளைஞர்கள் இந்த சூதாட்ட வலையில் விழுந்து தங்களின் மாத ஊதியத்தில் பெரும் பகுதியை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணப் பரிமாற்றம் இணையதளம் மூலமாகவே நடக்கிறது என்பதால், எவ்வளவு பணத்தை இழந்தோம் என்ற நினைவு கூட இல்லாமல் இளைஞர்கள் தொடர்ந்து விளையாடி அரும்பாடுபட்டு ஈட்டிய வருமானத்தை இழந்து விட்டு தவிக்கின்றனர். ஆனாலும், சூதாட்டத்தின் பிடியிலிருந்து அவர்களால் மீள முடியவில்லை. இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிகின்றன. இதன் காரணமாக பலர்  தற்கொலை முடிவையும்  நாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்  ஒருவர்  முறையீடு செய்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க கோரியும், அதனை அவசர வழக்காக விசாரிக்கவும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையிடப்பட்டுள்ளது. ஆனால் முறையீட்டுக்கு பதில், மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஏற்கனவே இதுதொடர்பான வழக்கு ஒன்றில்,   ரம்மி ஆடுவதும் சூதாட்டம் தான் என்றும், இது தடை செய்யப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம், தீர்ப்பளித்தது. ஆனால், அதை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட  மேல்முறையீடு வழக்கில், ஆன்லைன் ரம்மி சூதாட்டமா? என்ற வினாவே எழவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டது. அத்தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, ஆன்லைன் ரம்மி சூதாட்டம் வெகுஜோராக நடைபெற்று வருகிறது.