திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தை ஆளும் தற்போதைய பினராயி விஜயன் அரசின் மீது, வரும் சட்டசபைக் கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவை, கொரோனா பீடித்ததைத் தொடந்து, அடுத்தடுத்து அங்கே பிரச்சினைகள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றன. விமான விபத்து, மழைவெள்ளம் என்பதோடு நில்லாமல், தங்கக் கடத்தல் விவகாரமும், அம்மாநில அரசியலை ஆட்டிப்படைத்து வருகிறது.

இந்நிலையில், இம்மாதம் 24ம் தேதி கேரள சட்டசபை கூட்டத்தொடர் துவங்குகிறது. சட்டசபை அமைப்புகள், சமூக இடைவெளிக்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த சட்டசபைக் கூட்டத்தொடரின்போது, தங்கக் கடத்தல் விவகாரத்தை முன்வைத்து, ஆளும் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.