டில்லி:

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் வரும் 16-ம் தேதி பொறுப்பு ஏற்க உள்ளதாக டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலக வட்டார தகவல்கள் கூறுகின்றன.

கடந்த நவம்பர் 20ந்தேதி நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அத்துடன்  இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல்காந்தியை தேர்ந்தெடுப்பதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை மத்திய தேர்தல் பிரிவு தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அறிவித்தார்.

அதன்படி வேட்பு மனு தாக்கல் தேதி: டிசம்பர் 1 என்றும்,  வேட்பு மனுத்தாக்கலுக்கான கடைசி தேதி: டிசம்பர் 4ந்தேதி என்று தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தலைவர் பதவிக்கான  தேர்தல் டிசம்பர் 16ந்தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 19ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 4ந்தேதி ராகுல் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  இன்று, வேட்புமனு வாபஸ் வாங்க கடைசி தேசி (டிசம்பர் 11). இதுவரை ராகுலை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல்  செய்யாததால், இன்று மாலை ராகுல்காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது.

ராகுல்காந்தி,  கடந்த 2013-ம் ஆண்டு முதல் துணை தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் ராகுர் வரும் 16ந்தேதி அகில இந்திய காங்கிரசின் தலைவராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.