ஆர்.ஜே.பாலாஜி குறித்த சுவர் விளம்பரம்

சென்னை:

பிரபல வானொலி நிகழ்ச்சி தொப்பாளரும், நகைச்சுவை நடிகரும், தற்போதைய ஐபிஎல் வர்ணனையாளருமான ஆர்.ஜே. பாலாஜி அரசியலுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. அவரது பெயரில் சுவர் விளம்பரம் வரையப்பட்டுள்ளதால் பரபரப்பு உச்சத்தை எட்டி உள்ளது.

சமீப காலமாக நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக அறிவித்து வரும் நிலையில், ஆர்.ஜே.பாலாஜிக்கும் அரசியல் களம் புக காத்திருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது ஆர்ஜே பாலாஜி  பல படங்களில் முன்னணி காமெடியனாக கலக்கி வருகிறார். ஐபிஎல் தொடரின் தமிழாக்க வர்ணனையும் செய்து வருகிறார். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

ஏற்கனவே,  நடிப்பையும் தாண்டி, பல சமூக பணிகளிலும் ஈடுபட்டு வரும் பாலாஜி, சென்னையில் ஏற்பட்ட வெள்ளம், ஜல்லிக்கட்டு போராட்டம், காவிரி பிரச்சினை போன்றவற்றில் தனது பங்கை சிறப்பாக செய்திருந்தார்.

இந்நிலையில் இவரை அரசியலுக்கு வரவேற்கும் வகையில் சுவர் விளம்பரம் ஒன்று  வரையப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த விளம்பரத்தில், ஆர்.ஜே.பாலாஜியின் முகம் வரையப்பட்டு, மே18  இளைஞர்களை வழி நடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி அவர்களை வருக வருக என எழுதப்பட்டுள்ளது.

இது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாத அரசியல் கட்சியினரிடையேயும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. ஏற்கனவே ஆர்.ஜே. பாலாஜிக்கு இளைஞர்கள் வட்டத்தில் தனி செல்வாக்கு உள்ள நிலையில், இந்த சுவர் விளம்பரத்தில் தெரிவித்துள்ள மே 18ந்தேதியை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.