சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் சீட் பங்கீடு நடத்துவது குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்திருக்கிறது. புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் முடிவுக்கு வந்திருக்கிறது.

அதன்படி அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தங்கள் அரசியல் நகர்வுகளை ஆரம்பித்துள்ளன. அதிமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது.

திமுகவும் தமது உள்ளாட்சி பணிகளை துவங்கியிருக்கிறது. அதன் கூட்டணி கட்சிகளும் களத்தில் இறங்கி இருக்கின்றன. அதன் ஒரு கட்டமாக, சீட் பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சு நடத்த காங்கிரஸ் தயாராக இருப்பதாக அதன் முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத அவர்கள் கூறி இருப்பதாவது: உள்ளாட்சி தேர்தலுக்காக பல மாதங்களாக நாங்கள் தயாராகி வருகிறோம். விரைவில் அனைத்து பணிகளும் இறுதி வடிவம் என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறி இருப்பதாவது: மாவட்ட அளவில் திமுக பிரதிநிதிகளுடன், காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகின்றனர்.

இறுதியாக உட்கார்ந்து, அனைத்து விவகாரங்களையும் பேசி முடிப்போம். ஒரு சில நாட்களில் அனைத்தும் முடிந்துவிடும். ஏற்கனவே 2 கட்டங்களாக இது தொடர்பாக பேசி ஆலோசனை நடத்தி இருக்கிறோம் என்றார்.