சென்னை:

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழகஅரசு அரசாணை பிறப்பித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,  அனைத்து வாதங்களும் நிறைவு அடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில்  நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழகஅரசு உத்தரவிட்டு, ஆலைக்கு சீல்வைத்தது.

இதை எதிர்த்து  ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடும்படி உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரியும், ஆலையை மூடி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரியும் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்குகளை நீதிபதிகள் சிவஞானம்,பவானி சுப்பராயன் அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த ஒரு வருடமாக விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின் 39-வது நாளான நேற்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன், தமிழக அரசு சார்பில், அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

அப்போது, அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் விஜய்நாராயணன்  தூத்துக்குடி சுற்றுப்புற சூழலை பாதுகாக்க ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை தவிர அரசுக்கு வேறு வழியே இல்லையெனவும், மக்களுக்கு சுத்தமான காற்று, குடிநீர் வழங்குவது அரசின் கடமை என்ற அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும்,  ஆலையை சுற்றி 25 மீட்டருக்கு பசுமை போர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற அடிப்படை விதியை கூட ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பின்பற்ற தவறி விட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னர் தூத்துக்குடி சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் காற்றின் தரம் அதிகரித்துள்ளது என்ற தகவல்களையும் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியது.

தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியத்தின் விதிகளை தொடர்ந்து பின்பற்ற மறுத்ததின் காரணமாகவே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகவும், உச்சநீதிமன்றம் கடந்த காலத்தில் வகுஒத்த விதிகளை பின்பற்றாததற்காக ஆலை நிர்வாகத்திற்கு விதித்த 100 கோடி அபராதம் இதற்கு சான்று எனவும் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து வாதாடிய ஸ்டெர்லைட் வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், கடந்த 2018 ம் ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதைத் தொடர்ந்து, வேதாந்தா நிறுவனத்துக்கு நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று கூறினார்.

இதையடுத்து வாதாடிய தமிழகஅரசு வழக்கறிஞர், 1997 ம் ஆண்டு ஆலை தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை அவர்கள் கூறும் கணக்கை அடிப்படையாக வைத்து பார்த்தால், ஆலை நிர்வாகம் சுமார்  20 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது  என்பது தெரிகிறது என்று சுட்டிக்காட்டியதுடன், 3000 கோடி முதலீடு செய்து 20 ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிய பின்னரும் ஆலை மூடியதால் பலத்த நஷ்டம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது  என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வாதாடிய ஸ்டெர்லைட்  வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டால், தமிழக அரசு விதிக்கும்  அனைத்து விதிகளையும் அமல்படுத்துவோம் என்றும், விதிகளையும் பின்பற்ற ஆலை நிர்வாகம் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

காரசாரமாக நடைபெற்ற இரு தரப்பு வாதங்கள் மற்றும்  இடையீட்டு மனுதாரர்கள்  வாதங்கள் என அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.