மும்பை: சரியான விஷயத்தை சரியான நேரத்தில் நிச்சயம் தெரிவிப்பேன் என்று மகாராஷ்டிராவின் காபந்து முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் கூறியிருக்கிறார்.

அஜித் பவார் துணை முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த சில மணி நேரங்களில் பெரும்பான்மையை சந்திக்காமலேயே தமது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னவிஸ்.

உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவால் நீதி வென்றது என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மகிழ்ச்சி தெரிவித்துவிட்டன. அஜித் பவாரின் கடைசி நேர முடிவால், என்சிபி கட்சியினரும், அவரது குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந் நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சிறப்பு சட்டசபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அப்போது காபந்து முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அஜித் பவார் முதலில் ஆதரவு தெரிவித்து, பின்னர் துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியது குறித்து கேள்வி எழுப்பினர்.

அவருடன் இணைந்தது தவறான முடிவாக போய்விட்டதா என்றும் கேட்டனர். அதற்கு பட்னவிஸ் பதில் அளித்ததாவது: சரியானதை சரியான நேரம் போது அனைவருக்கும் தெரிவிப்பேன். யாரும் இது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்.