மேற்குவங்க மாநிலத்தில், கணிப்புகளையும் மீறி, அசுர வெற்றியுடன், மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி.

அம்மாநிலத்தில், சுதந்திர காலம் தொடங்கி, 1977ம் ஆண்டுவரை, காங்கிரஸ் ஆட்சியே இருந்து வந்தது. பின்னர், 1977ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த கம்யூனிஸ்ட், கடந்த 2011ம் ஆண்டுவரை, மொத்தம் 35 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து நரசிம்மராவ் காலத்தில் பிரிந்துவந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆதிக்கத்தை அரும்பாடுபட்டு தகர்த்து, 2011ம் ஆண்டு 184 இடங்களைப் பெற்று ஆட்சியமைத்தார்.

அப்போது, சில அரசியல் விமர்சகர்கள் இவ்வாறு கூறினார்கள். “காங்கிரஸ் கோட்டையை தகர்த்த கம்யூனிஸ்ட்டை 35 ஆண்டுகாலம் சாய்க்க முடியவில்லை. ஆனால், மம்தா பானர்ஜி இறுதியாக இப்போது வென்றுவிட்டார். இனி, இவரை வீழ்த்த வேண்டுமானால் குறைந்தது 20 ஆண்டுகாலமாவது ஆகும்” என்றனர்.

கடந்த 2016 தேர்தலில் 211 இடங்களை வென்ற மம்தா, தற்போது அதைவிட அதிகமான இடங்களை வெல்லும் நிலையில் உள்ளார். அந்த அரசியல் விமர்சகர்கள் சொன்னது ஒருபக்கம் என்றாலும், இடையில் புகுந்து விளையாடிய பாஜகவை நாம் இங்கே கட்டாயம் கணக்கில் எடுக்க வேண்டும்.

மோடி – அமித்ஷாவின் பாஜக செய்த அத்தனை தில்லாலங்கடி வேலைகளையும் தாண்டி, மம்தா பானர்ஜி வென்றுள்ளதானது, அவரின் தனிப்பட்ட சாதனைக்குத்தான் அதிகம் சேருமே ஒழிய, அந்த அரசியல் விமர்சகர்கள் சொன்ன மேற்கு வங்கத்தின் அரசியல் சூழல்களுக்கு அதிகம் சேராது!

மேற்குவங்கத்தைப் பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆட்சிகள், பல தேர்தல்களுக்கு தொடர்வதை நம்மால் காண முடிகிறது.