சென்னை: ஏப்ரலில் திட்டமிடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளின் பருவத் தேர்வுகள், மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்படலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவலால், உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பள்ளிகளின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் மற்றும் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளுக்கான தேர்வுகளையும் திட்டமிட்ட தேதியில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அந்தக் காலக்கெடுவுக்குப் பின்னரும் இயல்பு நிலை திரும்புமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதன் காரணமாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளின் தேர்வுகள் மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து உயர் கல்வித்துறை சார்பில் கூறப்படுவதாவது: ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி முடிந்தாலும், மாணாக்கர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் அவகாசம் வழங்க வேண்டியுள்ளது.

அதேபோல, தேர்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளுக்கு சிறிது அவகாசம் தேவைப்படும். எனவே, ஏற்கனவே திட்டமிடப்பட்டப் பருவத் தேர்வுகளை மே மாதத்திற்கு தள்ளிவைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.