வேலூர்:

வேலூர் பாராளுமன்ற தொகுதி  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது என்ன நடவடிக்கை? எடுப்பது என்பது குறித்து, மாவட்ட  நீதிபதியுடன் காவல்ஆய்வாளர் 2வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார். அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்படும் அறிக்கையின் மேல் ஆணையம் முடிவு எடுக்கும் என தெரிகிறது.

இதன் காரணமாக வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்று பரபரப்பு நிலவி வருகறது..

வேலூரில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை தொடர்பாக காட்பாடி காவல் நிலையத் தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து  டிஎஸ்பி சங்கர், காவல் ஆய்வாளர் ஆகியோர் நீதிபதி ஜெய சுதாகருடன் 2வது நாளாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது. 2வது கட்ட வாக்குப்பதிவு  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி  நடைபெற உள்ளது.

தேர்தல் காரணமாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்கள் மற்றும் பணத்தை  பறிமுதல் செய்து வருகின்றனர்.  கடந்த சில தினங்களுக்கு முன்  காட்பாடியில் உள்ள  திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர்.

அதேபோல் வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரி,   காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு, திமுக பிரமுகரின் தனியார் சிமெண்ட் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் கட்டு கட்டாக  மூட்டைகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர் .பின்னர்  துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றது.இதில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் பின்  துரைமுருகன் வீட்டில் சோதனை செய்தது பற்றி தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்தது வருமான வரித்துறை.வருமான வரித்துறையினரின் அறிக்கையை ஆய்வு செய்தபின் தேர்தல் ஆணையம் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வேலூரில் துரைமுருகன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மாஜிஸ்திரேட் அனுமதி அளித்ததும் வழக்கு பதிவாகும்.எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்படும் .அறிக்கை அடிப்படையில் வேலூர் தொகுதி தேர்தல் குறித்து ஆணையம் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில்,  வருமான வரித்துறை சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில், துரைமுருகன் மகன்  கதிர் ஆனந்த், சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது 171(E)-, 171 (B)(2) IPC. 125(A)PPL ACT ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.