சென்னை:

ஸ்திரேலியாவின் மெர்போர்ன் நகரில் பேசிய நடிகர் விஜய்சேதுபதி, காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை குற்றம் சாட்டியிருந்தார். அவரது பேச்சு தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் வரும்  13ந்தேதி தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருதை விஜய் சேதுபதி பெறுவாரா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

பிரபல நடிகர் விஜய் சேதுபதி மெல்பேர்னில் நடைபெறும் இந்திய திரைப்படவிழாவில் விருது பெற்ற நிலையில், முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார்.

அப்போது, காஷ்மீர் விவகாரம் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கூறியிருந்தார். அதுபோல தமிழின விரோத முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

விஜய்சேதுபதியின் மாறுபட்ட கருத்து சர்ச்சைகளை உருவாக்கி உள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தமிழக அமைச்சர் பாண்டியராஜன்:-

நடிகர் விஜய்சேதுபதி நல்ல நடிகர். அவர் கருத்து தெரிவிப்பது தவறு இல்லை. ஆனால் எந்த பிரச்சனை பற்றியும் கருத்து தெரிவிப்பதற்கு முன்பு அதன் பின்புலத்தை அறிந்து கொள்ள வேண்டும். அரசியல் சட்டம் 370, 35ஏ ஒரு வரலாற்றுப் பிழை. அது சரி செய்யப்பட்டுள்ளது. விஜய்சேதுபதி போன்ற கலைஞர்கள் முதலில் அந்த சட்டத்தில் என்னதான் இருக்கிறது என்று பின்புலத்தை ஆராய்ந்து படித்து கருத்து சொன்னால் நன்றாக இருக்கும்.

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை:-

நாட்டின் மிக முக்கியமான பிரச்சனையில் நடிகர்கள் கருத்து சொல்லும் போது அவர்கள்தான் எல்லாம் தெரிந்தவர்கள் போல் அதிகாரப்பூர்வமாக பேசுகிறார்கள். காஷ்மீரை பற்றி தெரியாத வர்களெல்லாம் பேசுகிறார்கள் என்று ஒரு நடிகர் கூறுகிறார்.

அப்படியானால் அவர் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துதான் பேசுகிறாரா? என்றால் இல்லை. இதில் பெரியாரையும் துணைக்கு இழுக்கிறார்கள். காஷ்மீர் பிரச்சனையை மத்திய அரசு சரியாக கையாண்டு வருவதாக பல வெளிநாடுகள் பாராட்டி உள்ளன என்று தெரிவித்து உள்ளார்.

வளர்ந்து வரும் நடிகரான விஜய்சேதுபதியின் கருத்து தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ரஜினி போன்ற மூத்த நடிகர்கள் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஅரசுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில், விஜய்சேதுபதியின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு அதிமுக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வரவேற்பு தெரிவித்து உள்ளது. தமிழக அமைச்சரும் விஜய்சேதுபதியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், வரும் 13ந்தேதி தமிழக அரசின் கலைமாமணி விருது விழா நடைபெற உள்ளது. இதில் கடந்த 2017ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டு உள்ள  விஜய் சேதுபதி, தமிழக அரசிடம் இருந்து விருதை பெறுவாரா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.