பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தன், பணியில் இணைந்துள்ள நிலையில், சக நண்பர்களுடன்  எடுத்த  வீடியோ வைரலாகி வருகிறது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானப்படை விரட்டி அடித்தது.

அப்போது, பாகிஸ்தானில் தவறுதலாக தரையிறங்கிய  விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினருடன் சிக்கினார். பின்னர், இரண்டு நாட்களில் பாகிஸ்தான் அரசு அவரை விடுவித்தது இதனை யடுத்து, தாயகம் திரும்பிய அபிநந்தனுக்கு எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனையடுத்து, டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அபிநந்தன் சிகிச்சை பெற்று வந்தார். இதைத்தொடர்ந்து பாகிஸ்தானில் நடந்தவை குறித்து விசாரணையும் நடத்தப்பட்டது.

இதற்கு பின் அபிநந்தனுக்கு 4 வார மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவ்விடுப்பு காலத்தில் அபிநந்தன் தன் பெற்றோர் உள்ள சென்னைக்கோ அல்லது வேறு எங்கும் சென்றோ ஓய்வெடுக்காமல் ஸ்ரீநகரில் தான் பணியாற்றும் விமானப்படை குழு உள்ள இடத்திற்கே சென்று விட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், அபிநந்தன் சக வீரர்களுடன் விமானப்படை வீரர் தொடர்பான உடையுடன் ஜாலியாக செல்பி எடுத்தும், வீடியோ எடுத்துள்ள நிகழ்வு தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.  அவர் பணியில் இணைந்த பிறகு எடுத்த முதல் வீடியோ இது என்பது குறிப்பிடத்தக்கது.