சென்னை:

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வாரத்திற்குள் கவர்னர் உத்தரவிட வேண்டுமென திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சி எம்எல்ஏ.க்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் அடங்கிய குழுவுடன் கவர்னரை சந்தித்து ஒவ்வொருவரின் சார்பிலும் தனித் தனியே கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், ‘‘ஆளும் கட்சிக்கு 114 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. எதிர்க்கட்சிகளான திமுக 89, காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1 ஆகியவற்றுடன் தினகரன் தலைமையிலான போட்டி அதிமுகவின் 21 பேர் கொண்ட குழு உள்ளன. இதன் மூலம் மொத்தம் 119 இருப்பதால் ஆளும்கட்சி பெரும்பான்மை இழந்துவிட்டது. எனவே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் எஸ் ஆர் பொம்மை வழக்கு, அருணாச்சலப் பிரதேச வழக்கு ஆகியவற்றின் முன்னுதாரணத்தின்படி அரசின் பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டிய இடம் சட்டமன்றம்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்டாலின் கூறுகையில், ‘‘கவர்னர் ஒருவார காலத்திற்குள் சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கேட்டுக்கொள்ள வேண்டும். 114 பெரிதா, 119 பெரிதா? என்பதை முடிவு செய்து அதன்படி கவர்னர் நடப்பார். அவர் தற்போது தனது நிலைப்பாட்டில் சற்று மாறியிருப்பது போல் காணப்படுகிறது.

அப்படி கவர்னர் முடிவு செய்யாவிட்டால் நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடுவோம். இவ்விஷயத்தில் தான் பத்திரிகையாளர்களை சந்திப்பது இதுவே கடைசியாக இருக்கும்’’ என்றார்.