ஆஸ்திரேலியாவை தாக்கிய டெபி சூறாவளி புயலால் அங்கு குடிநீர் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மடங்கு விலை உயர்த்தப்பட்டு குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டெபி சூறாவளி புயல் தாக்குதல் காரணமாக ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள குவின்ஸ்லாந்து ஓயிட்சண்டே பிராந்தியத்தில் பவன் நகரம் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளது. ஒயிட் சண்டே பிராந்தியத்தில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக குவின்ஸ்லாந்து பகுதியில் தூய குடிநீருக்கு பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.

மேலும், அங்கு தண்ணீரில் அபாயகரமாக பாக்டீரியாக்களின் அளவு அதிகரித்திருப்பதாக உள்ளாட்சி அமைப்புகள் எச்சரித்துள்ளன. பவன் பகுதி குழாய்களில் வரும் தண்ணீரை காயச்சி குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமான ‘டார்கெட் ஆஸ்திரேலியா’ என்ற டிபார்ட்மென்டல் ஸ்டோரில் 600 மிலி கொள்ளளவு கொண்ட 24 தண்ணீர் பாட்டில்கள் கொண்ட ஒரு பேக் 72 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பவன் பகுதியை சேர்ந்த நாதலை மேகர் என்ற பெண் இந்த விலையை கண்டு அதிர்ச்சியடைந்தார். யாரோ விலையை தவறாக எழுதி வைத்துள்ளனர் என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்த ஊழியரிடம் இது குறித்து தெரிவித்தார். ஆனால், அந்த கடை ஊழியர் உண்மையான விலை தான் அது என்று பதில் கூறினார்.

இதை கண்டித்து அவர் தனது பேஸ்புக்கில் ‘வெறுக்கத்தக்க நாய்கள்‘ என்று பதிவு செய்துள்ளார். பேரிடர் மீட்பு குழுவினர் எனக்கு 12 பாட்டில் தண்ணீர் கொடுத்தனர். அதை தான் நான் வீட்டிற்கு எடுத்துவந்தேன். தற்போது முதல், டார்கெட் நிறுவனத்தில் எந்த பொருளும் வாங்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

டார்கெட் ஆஸ்திரேலியா நிறுவனத்தினர் கூறுகையில், ‘‘ வழக்கமாக ஒரு பாட்டில் 3 டாலருக்கு விற்பனை செய்யப்படும். தற்போது இதன் விலை உயர்த்தப்பட்டுள்ளது, தண்ணீர் பற்றாகுறை காரணமாக ஒரு டாலர் விலை குறைக்கப்பட்டுள்ளது. பவன் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் தவறான புரிதல் காரணமாக தவறு நடந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு தேவையான உதவிகள் மேற்கொள்ளப்படும்’’ என்று அந்நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதைதொடர்ந்து ஒயிட்சண்டே பகுதியில் உள்ள பிபி பெட்ரோல் பங்கிலும் தண்ணீர் பற்றாகுறையை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 600 மிலி தண்ணீர் கொண்ட 12 பாட்டில்கள் அடங்கியே பேக் 44 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆன்லைனின் சில்லறை விற்பனையில் இதே அளவு கொண்ட பேக் விலை 18 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை அறிந்தவுடன் 26 டாலராக குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் துயரத்தின் மூலம் ஆதாயம் தேடுபவர்கள் விபரம் வெளியிடப்பட்டு அவமானப்படுத்தப்படுவார்கள்.