மீனவர்களுக்காக புதுமுறையில் பீர்.. வீட்டிலேயே தயாரித்த கில்லாடி பெண்

சரியாக ஒரு மாதத்திற்கு முன்னர் தனது கணவனுக்காக வீட்டிலேயே ஒயின் காய்ச்சிய குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு, எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்ட எண்ணூரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னையில் டாஸ்மாக் இன்றும் திறக்கப்படாத சூழலில் இவர் தனது இரு மகன்களுடன் சேர்ந்து வீட்டிலேயே பீர் தயாரித்து அக்கம்பக்கத்தில் விற்பனை செய்து வந்துள்ளார்.  இது பற்றி அறிந்த காவல்துறையினர் இவர் வீட்டைச் சோதனை செய்தபோது, சுமார் 60 லிட்டர் பீர் வரை இருந்துள்ளது

இது தொடர்பாக எண்ணூர் எக்ஸ்பிரஸ் ஹைவே, ஜேஜே நகர் பகுதியைச் சேர்ந்த 65 வயது மேரி, அவரது மகன்கள் சாலமன் (40) மற்றும் ராஜ்குமார் (38) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேரி தனது மகன்களின் உதவியுடன் யூடியூபில் பார்த்து திராட்சை மற்றும் லாங்கன் பழங்களைக்கொண்டு பீர் தயாரித்து பாட்டில்களில் விற்பனை செய்து வந்துள்ளார்.  குறிப்பாகக் கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு இவர் விற்று வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

– லெட்சுமி பிரியா