சென்னை
ஏபிவிபி தலைவர் சுப்பையா சண்முகம் தனது வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

ஆர் எஸ் எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி தலைவராகப் பதவியில் உள்ள சுப்பையா சண்முகம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில்  பேராசிரியராகவும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் துறைத் தலைவராகவும் பணி புரிந்து வருகிறார்.    ஆதம்பாக்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இவர் வசித்து வருகிறார்.
அதே குடியிருப்பில் 62 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார்.  இந்த பெண்ணுக்குச் சொந்தமான இடத்தில் சுபையா தனது வாகனத்தை நிறுத்த அனுமதி கேட்டுள்ளார்.  அதற்கு மாதந்தோறும் ஒரு தொகையை வாடகையாக அளிக்க வேண்டும் என அந்தப் பெண் கூறி உள்ளார்.  இது தொடர்பாக இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
எனவே அந்தப் பெண்ணை சுப்பையா தொடர்ந்து அசிங்கப்படுத்தி வந்ததாகப் பெயர் தெரிவிக்க விரும்பாத அந்தப் பெண் ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் கடந்த 11 ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.  தனது புகாரில் சுப்பையா சண்முகம் தனது வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாகவும் அறுவை சிகிச்சையில் பயன்படுத்திய மாஸ்க் உள்ளிட்ட குப்பைகளை வீசி விட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது புகாருக்கு சான்றாக சிசிடிவி பதிவுகளை அவர் அளித்துள்ளார்.   அந்தப் பெண்ணின் மருமகன் பாலாஜி விஜயராகவன் என்னும் ஸ்டாண்டப் காமெடியன் மற்றும் கர்நாடக இசைக்கச்சேரி ஒருங்கிணைப்பாளர் இது குறித்து சமூல வலைத் தளங்களில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.  தனது அத்தைக்கு இதுவரை இது தொடர்பாக எந்த நீதியும் கிடைக்கவில்லை எனவும் பதிந்துள்ளார்.