நடந்து சென்றபோது பிரசவம் : தரையில் விழுந்த சிசுவுக்கு தலையில் அடி..

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஈ.எஸ்.ஐ.மருத்துவமனையில் விஜி என்ற பெண் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.

குழந்தை பிறக்க ஒரு வாரம் ஆகும் என்று டாக்டர்கள் கூறி விட்டதால், அவரை கவனிப்பதில் நர்சுகள்  அலட்சியம் காட்டியுள்ளனர்.

சம்பவத்தன்று வார்டில் இருந்தபோது, விஜிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. நர்சுகளிடம் இது பற்றி அவர் தெரிவித்த போது அவர்கள் ,’’ இன்னும் நாட்கள் இருக்கிறது’’ என்று கூறியுள்ளனர். அந்த பெண்ணின் பக்கத்தில் சென்று கூட பார்க்கவில்லை.

அதிகாலை அவருக்குப் பிரசவ வலி அதிகரித்ததுடன் ரத்தப்போக்கும் ஏற்பட்டது.

அப்போது விஜி கழிப்பறைக்கு சென்றுள்ளார். நடந்து போகும்போதே அவருக்குப் பிரசவம் ஏற்பட்டு,கழிப்பறை அருகே  குழந்தை தரையில் விழுந்துள்ளது.

அவர் கூக்குரல் எழுப்பிய பிறகே அங்கு நர்சுகள் வந்துள்ளனர்.

தரையில் விழுந்த குழந்தையின் தலையில் அடிபட்டதால்  அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அந்த குழந்தையைச் சேர்த்துள்ளனர்.

டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அசட்டையாக இருந்ததால்  குழந்தை காயம் அடைந்துள்ளதாக விஜியின் உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.

-பா.பாரதி.