ந்தூர்

தொலைக்காட்சி தொடரைப் பார்த்து ஒரு பெண்ணை கொலை செய்த புகுந்த வீட்டார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது பெற்றோர்கள், சகோதரி மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார். கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி வாக்குவாதங்கள் வருவது வழக்கமாக இருந்துள்ளது.  சில வேளைகளில் அதன் காரணமாகக் கணவன் மனைவியை அடிப்பதும் நடந்து வந்துள்ளது.

அந்தப் பெண்ணின் புகுந்த வீட்டார் கணவரைக் கண்டிக்காமல் அவருக்கு ஆதரவாகப் பேசி வந்துள்ளனர்.  சமீபத்தில் கணவன் மனைவிக்கு இடையில் கடும் தகராறு ஏற்பட்டுள்ளது.  அதையொட்டி கணவன் அவரை அடித்துத் துன்புறுத்தி உள்ளார்.   மேலும் சண்டை வலுக்கவே கணவன் ஒரு தலையணையால் அந்த பெண்ணின் முகத்தில் அழுத்தி உள்ளார்.

மூச்சு திணறிய அந்தப் பெண் மரணம் அடைந்துள்ளார்.  அந்த கொலையை மறைக்க அந்த கணவனின் குடும்பத்தினரும் உதவி உள்ளனர்.  கணவர் ஒரு  கொண்டை ஊசி மூலம் இறந்த மனைவி உடலில் காயம் ஏற்படுத்தி விட்டு அவர் பாம்பு கடித்து இறந்து விட்டதாகச் சொல்லி உள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் விசாரித்த போது இவர்கள் வீட்டில் அடிக்கடி சண்டை நடப்பது தெரிந்துள்ளது.   மேலும் விசாரணையில் புகுந்த வீட்டார் இந்த கொலை குறித்த உண்மைகளைத் தெரிவித்துள்ளனர்.   அத்துடன் தங்களுக்கு ஒரு தொலைக்காட்சி தொடர் மூலம் இந்த யோசனை தோன்றியதாக கூறி உள்ளனர்.

இந்தூர்  காவல்துறையினர் தற்போது அந்த கணவர், அவர் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோரை கைது செய்துள்ளனர்   மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.