கோரக்பூர்: உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான கர்ப்பிணிக்கு  ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அம்மாநிலத்துக்குட்பட்ட தியோரியா மாவட்டம் கவுரி பஜார் பகுதியைச் சேர்ந்த 26 வயது கர்ப்பிணி ஒருவர் கோரக்பூரில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, மருத்துவக் குழு அவருக்கு மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளித்து வந்தது. இந் நிலையில் அவர் நான்கு குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்தார். 3 குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளன. ஒரு குழந்தை மட்டும் வென்டிலேட்டர் கருவி உதவியுடன் சிகிச்சையில் உள்ளது.

இதுபோன்று நடப்பது மிகவும் அரிது என்ற மருத்துவர்கள், பிரசவம் சவால் மிகுந்ததாக இருந்தது என்றனர். 4 குழந்தைகளின் மாதிரிகளும் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.