மனைவியைக் கொன்றார், ஒன்பதாவது கணவன்..

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி ஐதராபாத் வந்துள்ளார்.

வாடகை கார் ஓட்டும் வேலை கிடைத்தது. ஸ்ரீராம்காலனியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி இருந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரியும் வரலட்சுமி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவளிடம் காதல் வயப்பட்டார்.

‘தனக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு குழந்தையும் உள்ளது’’ என்று வரலட்சுமி தனது கடந்த கால வாழ்க்கையைக் கூறி, நாகராஜைத் திருமணம் செய்து கொண்டாள்.

ஸ்ரீராம்காலனி வீட்டிலேயே இருவரும் குடும்பம் நடத்தினர்.

கொஞ்ச நாட்களில் வரலட்சுமியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. வேறு ஒரு ஆளுடன் மனைவி சுற்றுவதை நாகராஜ் நேரில் பார்த்து விட்டார்.

கண்டித்தார். அவள் கேட்பதாகத் தெரியவில்லை.

சம்பவத்தன்று, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.ஆத்திரம் அடைந்த நாகராஜ், வீட்டில் கிடந்த கத்தியை எடுத்து , வரலட்சுமியின் கழுத்தை அறுத்துக் கொன்றார்.

பின்னர் பகாடிஷெரீப் காவல்நிலையத்தில் , சரண் அடைந்தார்.

வரலட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்திய காவலருக்கு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது.

வரலட்சுமிக்கு, நாகராஜ் ஒன்பதாவது கணவனாம்.

ஏற்கனவே எட்டு பேரைக் கல்யாணம் செய்து அவர்களைப் பிரிந்து வாழ்ந்த வரலட்சுமி, நாகராஜை ஒன்பதாவது முறையாகத் திருமணம் செய்திருப்பது தெரிய வந்தது.

இத்தனைக்கும் வரலட்சுமிக்கு 30 வயது தான் ஆகிறது.

-பா.பாரதி.