புதுடெல்லி: நல்ல வேலைவாய்ப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி, நாடு முழுவதும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளன மகளிர் அமைப்புகள்.

அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம்(AIDWA), இந்தியப் பெண்களுக்கான தேசிய ஃபெடரேஷன்(NFIW), அகில இந்திய முற்போக்கு மகளிர் சங்கம்(AIPWA), பிரகதிஷீல் மகிலா சங்கதன்(PMS), அகில இந்திய அக்ராகமி மகிலா சமிதி(AIAMS) மற்றும அகில இந்திய மகிலா சன்ஸ்கிரிதிக் சங்கதன்(AIMSS) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த நாடு தழுவிய அளவிலான போராட்டங்களில் ஈடுபடவுள்ளன.

உணவுப் பாதுகாப்பு, நல்ல பணிச்சூழல், மருத்துவ சேவைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல் உள்ளிட்ட நோக்கங்களை முன்வைத்து இவை போராட்டங்களை நடத்தவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் அனைத்து மாநிலங்களிலும் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கொரோனா பரவலுக்கு மத்தியில், வேலைவாய்ப்பின்மை, புலம்பெயர் தொழிலாளர் மற்றும் பெண்களுக்கான ஊதியம் நிறுத்திவைப்பு, வேளாண்மைதுறை பேரிடர், தொழிலாளர் நலன்சார் சட்டங்கள் மீறப்படுதல், மோசமான வாழ்க்கைத் தரம் உள்ளிட்டவை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.