தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக கும்பகோணம் சென்ற நடிகர் ஆர்யாவை மகளிர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

தனியார் தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யா பெண் பார்க்க செல்வது போன்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் 16 பெண்களில் பல்வேறு போட்டிகளில் வெல்லும் ஒரு பெண்ணை    ஆர்யா, மணந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிகழ்ச்சி பெண்களை இழிவுபடுத்துவதாக மகளிர் அமைப்பினர் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்நிகழ்ச்சிக்காக நடிகர் ஆர்யா, படக்குழுவினருடன் கும்பகோணம் சென்றார்.  அப்போது அவர் தங்கியிருந்த தனியார் விடுதி முன் ஒரு பெண்கள்  அமைப்பினர், ஆர்யாவை திரும்பிச்செல்லும்படியும், நிகழ்ச்சி ஒளிப்பதிவை நடத்தக்கூடாது என்றும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர், ;போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதன்பின்னர், நடிகர் ஆர்யா கும்பகோணம் அருகே குடவாசல் பகுதியில் நடைபெறும் படப்பிடிப்புக்கு காவல்துறை பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றார்.