தனியாக தங்கியிருந்து பணிசெய்வோர், சமைக்க நேரமில்லாத பணிபுரிவோர் மற்றும் வேறுசில காரணங்களால் சில நேரங்களில் சமைக்க முடியாதோர் ஆகியோருக்காக, பெங்களூரு நகரில் ஒரு அருமையான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட வாட்ஸ்ஆப் குழுவில் நாம் இணைந்திருந்தால் போதும்; நாம் விரும்பிய உணவு அல்லது நொறுக்குத் தீனி வகைகளை, நியாயமான விலையில், வீட்டுச் சுவையுடன் சுவைக்கலாம். ஆம், அந்த உணவுகள் வீட்டில் செய்யப்பட்டவைதான்.

இதற்கான பல வாட்ஸ்ஆப் குழுக்கள், பெங்களூரு நகரின் பல பகுதிகளில், குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளான ஒயிட்ஃபீல்டு, மகாதேவ்புரா, சர்ஜாபூர், பன்னேர்கட்டா மற்றும் ஹென்னூர் ஆகிய பகுதிகளில் இயங்குகின்றன.

நமக்குத் தேவையான உணவோ அல்லது தின்பண்டமோ, எது வேண்டுமானாலும், தொடர்புடைய வாட்ஸ்ஆப் குழுவில் சென்று, விலாசம் உள்ளிட்ட தகவல்களை தெரிவித்தால், வீடு தேடியே சிறிதுநேரத்தில் வேண்டியவை வந்துவிடும். ஏனெனில், உணவையோ, தின்பண்டத்தையோ தயார் செய்பவர், நம் பகுதியிலேயே வசிக்கும் ஏதேனுமொரு குடும்ப உறுப்பினர்தான்.

இதன்மூலம், அவர்களுக்கும் ஒரு புதிய வருவாய் கிடைப்பதோடு, ஹோட்டல்களில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்ள விரும்பாதவர்களுக்கும் ருசியான மற்றும் தரமான உணவு கிடைத்துவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.