சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் அதிக அளவிலான பணிச்சுமை தரப்படுவதாக குற்றம் சாட்டி,  கண்டனம் தெரிவித்து, செவிலியர்கள் இன்று  திடீர் போராட்டத்தில் குதித்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். ஆனால், மருத்துவமனையில் போதிய செவிலியர்கள் நியமிக்கப் படாததால், ஏற்கனவே உள்ள செவிலியர்களுக்கே கூடுதல் பணி வழங்கப்பட்டு வருகிறது. இதனால், கடும்பல செவிலியர்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை  செவிலியர்கள் அனைவரும் திடீரென போராட்டத்தில் குதித்தனர்.  கூடுதல் பணிச்சுமையை கண்டித்து திடீரென பணி புறகணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சுமார் 800 செவிலியர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 350 செவிலியர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாகவும், தங்களை தொடர்ந்து பணி செய்ய வலியுறுத்தப்பட்டு வருவ தாகவும், ஆனால், கொரோனா வார்டில் பணியாற்றும் தங்களுக்கு அடிப்படை வசதிகளைக்கூட ஏற்படுத்தி தரவில்லை என்று குற்றம் சாட்டினர்.

தங்களது குறைகள் குறித்து,  அதிகாரிகளிடம் நாங்கள் பல முறை கடிதங்கள் மூலமாகவும் பேச்சு வார்த்தை மூலமாகவும் தெரிவித்திருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், முதல்வரின் சொந்த மாவட்டத்தில் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, மருத்துவமனை டீன் பாலாஜி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 48 மணி நேரத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.

இதையடுத்து,  செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டம்   கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.