கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு, உதவி புரியும் நோக்கில், இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு முடுக்குதல் திட்டம்’ என்ற திட்டத்தின் கீழ் உலக வங்கி  1 பில்லியன் டாலர்கள் அதாவது 100 கோடி டாலர்கள் கடன் வழங்க ஒப்புதல் அளித்து உள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியாவுக்கு அவசர நிதியாக  1 பில்லியன் டாலர் கடன் வழங்கிய நிலையில் தற்போது மேலும் 1 பில்லியன் டாலர் வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலக நாடுகள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன. இந்தியாவும் கொரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களின் பாதிப்பை கணக்கில் கொண்டு, மேலும் 1 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்து உள்ளது.
இந்த  1 பில்லியன் டாலரில் 550 மில்லியன் டாலர்கள் தொகை பன்னட்டு வளர்ச்சி கூட்டமைப்பு கடனாக வழங்குகிறது.
200 மில்லியன் டாலர்கள் மறுகட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கான பன்னட்டு வங்கி அளிக்கும் கடன் .
மீதமுள்ள 250 மிலியன் டாலர்கள் ஜூன்  2020-க்குப் பிறகு கிடைக்கும்.
கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 18.5 ஆண்டுகள் . ஆனால், தற்போது கொரோனாவால் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளதால், கடன் செலுத்த கூடுதலாக 5 ஆண்டுகள் சலுகை வழங்கி உள்ளது.