சென்னை:

லக வங்கி அதிகாரிகள், சென்னை கார்ப்பரேஷன் அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, சென்னையில் மெகா தெரு திட்டம் உருவாக்க உலக வங்கி நிதி வழங்க சம்மதம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே உலக வங்க நிதிஉதவியுடன்  சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வரும் நிலையில், தற்போது முக்கிய சாலைகளை மெகா சாலைகளாக மாற்றும் பணிக்கும் நிதி உதவி வழங்க முன் வந்துள்ளது.

கடந்த வாரம் உலக வங்கிக்கும் கிரேட்டர் சென்னை நிறுவனத்திற்கும் இடை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து,  நகரத்தின் லட்சியமான ‘மெகா வீதிகள்’ திட்டத்திற்கு நிதியளிக்க உலக வங்கி சம்மதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் ஏறக்குறைய 70 சதுர கி.மீ பரப்பளவில் கோடம்பாக்கம், தேனாம்பேட்டை மற்றும் அடையார் மண்டலத்தில் 100 கி.மீ சாலைகளை மறுவடிவமைப்பதை உள்ளடக்கிய இந்த திட்டம், மோட்டார் வாகன போக்குவரத்தை மட்டுமல்லாமல் ஒவ்வொரு பயனருக்கும் பயன்படும் வகையில், இந்த சாலைகள் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த திட்டம் தொடர்பாக,  “உலக வங்கியின் போக்குவரத்து ஆலோசகர்களுடன் ஒரு கூட்டம் நடைபெற்றது, மேலும் அவர்கள் இந்த திட்டத்திற்கு நிதியளிப்பதற்கு  ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக  ஒரு திட்ட முன்மொழிவு அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும், அதன் பின்னர் அது மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று சென்னை  கார்ப்பரேஷன் கமிஷனர் ஜி பிரகாஷ் கூறி உள்ளார்.

இந்த திட்டம் செயல்முறைக்கு வர ஒரு வருடம் ஆகலாம், எனவே, பைலட் திட்டங்களின் ஒரு பகுதியாக மாநில அரசாங்க நிதியுதவியைப் பயன்படுத்தி ஐந்து நகர சாலைகளை உருவாக்க  திட்டமிடப்பட்டு உள்ளதாகவும்,  100 கி.மீ திட்டத்தை 20-30 கி.மீ சிறிய தொகுப்புகளாக மாற்றி செயல்படுத்த  ஆலோசகர்களுடன் பல சந்திப்புகளை நடத்தியுள்ளோம்  என்றவர்,  ஒவ்வொரு நீட்டிப்பிற்கும் ஒரு விரிவான திட்ட அறிக்கை ஆலோசகரால் தயாரிக்கப்படும். அவர்கள் சாலையின் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்வதோடு, மூத்த குடிமக்கள், குழந்தைகள், பெண்கள், ஊனமுற்றோர், சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான பயனர்களுக்கும் சிறந்த இணைப்பு மற்றும் அம்சங்களை உறுதி செய்வார்கள் என்று தெரிவித்து உள்ளார்.

மெகா ஸ்ட்ரீட் திட்டத்தின் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் குறைந்தபட்சம் ரூ .10-ரூ .20 கோடி செலவிடப்படும்  என்றும், இந்த திட்டம் முடிந்ததும் குறைந்தது 30 ஆண்டுகளுக்கு இந்த சாலைகள் தோண்டப்படாது  என்று அதிகாரிகள் உறுதி கூறுகின்றனர்.

முதல்கட்டமாக சென்னையில் சுமார் 100 கி.மீ. அளவிலான பணி முடிந்ததும்,  பின்னர் இத்திட்டத்தை முழு நகரத்திற்கும் விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.