லண்டன்: எம்சிசி என்று சுருக்கமாக அழைக்கப்படும் லண்டனிலுள்ள மாரில்போன் கிரிக்கெட் கிளப்பின் சர்வதேச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்ககரா, இந்த 2019 உலகக்கோப்பை மிகச்சிறந்த ஒரு போட்டித் தொடராக இருக்குமென கூறியுள்ளார்.

பிரிட்டனைச் சேராத, முதல் வெளிநாட்டு நபராக இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அவர், ஒரு நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

மேலும் அவர் கூறியதாவது, “இந்தப் பதவியை எனக்களிக்கப்பட்ட மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். கிரிக்கெட்டில், விளையாட்டு உணர்வு மங்கிப் போய்விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். ஒலிம்பிக் போட்டிகளில், கிரிக்கெட் சேர்க்கப்பட வேண்டுமென்பதே அனைவரின் விருப்பம். அந்த முயற்சி நல்ல முறையில் சென்று கொண்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் செயல்பாடு மிகச் சிறப்பாக உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் புதிய அணிகள் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். அணிகளின் சுற்றுப்பயண திட்டங்கள் போதுமான இடைவெளிகளுடன் அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் வீரர்களுக்கு காயங்கள் ஏற்படாது.

இந்த உலகக்கோப்பை போட்டித் தொடர், ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கும் ஒன்றாக இருக்கும் என்பதே என் கணிப்பு. இது, உலகின் சிறந்த ஒரு போட்டித் தொடராகவும் இருக்கும்” என்றார்.