டில்லி:

லக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாங்கள் சவாலை பற்றி கவலைப்படாமல் சாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளோம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறினார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ந்தேதி தொடங்க உள்ள நிலையில், கோப்பையை வெல்லப்போவது யார் என்று கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. போட்டியில் பங்குகொண்டுள்ள நாடுகள் அனைத்தும்,  வெற்றிக்கோப்பையை பறிக்க தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

தற்போதைய உலககோப்பை சாம்பியன்  ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் உலக கோப்பை போட்டியில்  பங்கேற்கின்றன.  இந்த ஆண்டு எரவுண்டு ராபின் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும்  இந்திய அணி இன்றிரவு இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.. முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது:-

முந்தைய உலகக்கோப்பை தொடரை விட தற்போதைய தொடர் சவாலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த  2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடியதை விட தற்போது ஆப்கானிஸ்தான் வங்காளதேசம் அணி வலுவானதாக உள்ளது. சவாலை முறியடித்து சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தும்.

இங்கிலாந்து ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என கருதுகிறேன். இந்திய அணியில் இருக்கும் பந்து வீச்சாளர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். நாங்கள் சவாலை பற்றி கவலைப்படாமல் சாதிப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டுள்ளோம்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் ஆட்டம் இந்த உலக கோப்பையில் பெரும் பங்கு வகிக்கும். அவரின் சிறு செயல்பாடுகள் கூட போட்டியின் ஆட்டத்தை மாற்ற கூடியது.  இந்திய அணி வீரர்கள் சவாலை கருத்தில் கொள்ளாமல் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.