லண்டன்: சமூகவலைதளத்தில் உலகின் மிகப் பிரபலமான மனிதர் ஒருவர் புதிதாக இணைந்துள்ளார். அவர் தேர்வுசெய்துள்ளது இன்ஸ்டாகிராம்என்ற அப்ளிகேஷன்!

அந்தப் புகழ்பெற்ற நபர் வேறு யாருமல்ல, பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்! இவர் கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்னதாக தனது முதல் மின்னஞ்சலை அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கடுத்து தற்போதுதான் சமூகவலைதளத்தில் இணைந்துள்ளார். லண்டனிலுள்ள புகழ்பெற்ற அறிவியல் அருங்காட்சியகத்திற்கு சென்றிருந்தபோதுதான், இவர் சமூகவலைதள அப்ளிகேஷன்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் இணைந்தார்.

ஆனால், பலரும் விரும்பும் செல்ஃபியை அவர் தனது முதல் பகிர்வாக தேர்வுசெய்யவில்லை.

மாறாக, 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த கணித‍வியலாளர் மற்றும் கணிப்பொறிக்கான முன்னோடி சார்லஸ் பேப்பேஜ், கடந்த 1843ம் ஆண்டு, விக்டோரியா மகாராணியின் கணவர் இளவரசர் ஆல்பர்ட்டுக்கு (இரண்டாம் எலிசபெத்தின் கொள்ளு முப்பாட்டனார்) எழுதிய கடிதத்தையே தனது முதல் பகிர்வாக தேர்வுசெய்தார்.

– மதுரை மாயாண்டி