மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய பாதுகாப்பு படையினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி-க்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட 24 மணி நேர தடை விதித்தது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில், மேற்கு வங்க தேர்தலில் நடைபெறும் விதிமீறல்களுக்கு அளவே இல்லை, இதுபோன்ற ஒரு தேர்தலை என் வாழ்நாளில் நான் சந்தித்ததில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க. தலைவருமான யஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

ஆங்கில பத்திரிகையான என்.டி.டி.வி. யின் இணைய இதழில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கும் அவர், விதிமுறையை மீறியதற்காக பிரதமர் மோடி மீதோ, அமித் ஷா மீதோ தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில், தேர்தல் நடைபெறும் நாட்களில், வங்கத்தின் வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்ய வரும் பிரதமர் மோடி, தேர்தல் நடைபெறும் பகுதி குறித்து பேசுவது அப்பட்டமான விதி மீறலாக தேர்தல் ஆணையத்திற்கு தெரியவில்லையா என்று கேட்டிருக்கிறார்.

மேலும், தேர்தல் நேரத்தில் பங்களாதேஷ் செல்லும் பிரதமர் அங்கு ஒருவிதமாகவும், மே. வங்க பரப்புரையில் வேறுவிதமாக பேசுவதும் மக்களின் மத உணர்வை தூண்டும் செயலாக அவர்களுக்கு தெரியவில்லையா ? என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளார்.

1962 ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற மூன்றாவது பொது தேர்தலின் போது தான் மாவட்ட நீதிபதியாக இருந்ததாகவும் பின் 67 ல் மாவட்ட ஆட்சியராகவும் இருந்து தேர்தல் பணிகளை கவனித்த நிலையில், இதுபோன்ற விதிமீறல்களை பார்க்கும் போது இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், தன் மீதான தடையை எதிர்த்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் மீதான 24 மணி நேர தடை இன்றிரவு 8 மணிக்கு முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.