டில்லி

முன்னாள் பா ஜ க அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஊழல் விவகாரத்தில் என் மகனும் விசாரிக்கப் பட வேண்டும், அமித்ஷாவின் மகனும் விசாரிக்கப்பட வேண்டும் என கூறி உள்ளார்.

முன்னாள் பா ஜ க அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பிரதமர் மோடியையும், அருண் ஜேட்லியையும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையில் கடுமையாக விமர்சித்தார்.  அதற்கு அவர் மகன் ஜெயந்த் சின்ஹா பதில் அளித்தார்.  இந்த விவகாரம் பரபரப்பானது.  தற்போது மற்றொரு பரபரப்பை யஷ்வந்த் சின்ஹா ஏற்படுத்தி உள்ளார்.

சமீபத்தில் பாரடைஸ் பேப்பர்ஸ் என்னும் புலனாய்வுத் தகவல் அறிக்கை வெளியானது.  அதில் வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்தவர்களின் பெயர்கள் என பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.  அதில் முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் மகனும், தற்போதைய பா ஜ க அரசின் அமைச்சருமான ஜெயந்த் சின்ஹாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது.  அதற்கு ஜெயந்த் சின்ஹா தமக்கும் அந்த முதலீடுகளுக்கும் சம்மந்தம் இல்லை எனவும், தாம் முன்பு பணி புரிந்த நிறுவனம் அந்த முதலீடுகளைச் செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.

யஷ்வந்த் சின்ஹா, “நான் அரசை இந்த பாரடைஸ் பேப்பர்ஸ் தகவலில் இடம் பெற்றுள்ள அனைவரின் பேரிலும் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.   அதுவும் 15 நாட்களில் இருந்து ஒரு மாதத்துக்குள் விசாரணை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும்.    இதில் என் மகனின் மேலுள்ள புகாரையும் விசாரிக்க வேண்டும்.   அதே போல சமீபத்தில் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா பற்றி எழுந்துள்ள புகாரைப் பற்றியும்  விசாரணை நடத்த வேண்டும்.  புகார் என்று வந்தால் ஜெயந்த் சின்ஹாவும் ஜெய் ஷாவும் ஒன்றுதான்.  யாராக இருந்தாலும் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.” என ஒரு தொலைகாட்சி நிகழ்வில் கூறி உள்ளார்.

மேலும் ஜி எஸ் டி பற்றி கேட்கப்பட்ட போது, “அது முழுக்க முழுக்க குழப்பமான ஒன்று.  அதை சரி செய்வது என்பது இயலாத காரியம்.  அதை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும்.   பட்டி, டிங்கரிங்க் வேலை பார்க்கும் அளவுக்கு ஜி எஸ் டி இல்லை.” எனக் கூறி உள்ளார்.