சென்னை:

ரசு மருத்துவமனையில் விரைவில்  யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் ஏற்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர்  கூறினார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதார துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்ட பேசினார்.

அப்போது, உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருப்பதே யோகா. இதன் மூலம் தன்னைத்தானே புரிந்து கொள்ளக்கூடிய, சுயம் உணர்த்தல் என்ற நிலையை எளிதாக அடையலாம். யோகா ஆன்மாவிற்கு அத்தியாவசியமான ஒன்று.

யோகா நம் ஆயுளை நீட்டிப்பதாலும் இந்த நாளில் உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, சுவாசக் கோளாறு, உடல் பருமன் போன்ற நோய்களுக்கு தீர்வு காண்பதற்கு யோகா பெரிதும் உதவுகிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கு பொது மக்களிடையே உள்ள வரவேற்பை உணர்ந்து அம்மாவின் அறிவிப்பின்படி 31 தாலுகா மருத்துவமனைகளிலும்,

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கே.கே.நகர் அரசு புணர்வாழ்வு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம், எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் மகளிர் நோய் இயல் நிலையம் உள்பட மொத்தம் 35 யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் தொடங்க  அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.